இருளைப் படைத்து
என்னை வெளிச்சத்திற்குக்
கொணர்ந்த இறைவனே
உனக்கு
எடிசன் எழுதுகிறேன்:
விண்ணில் உன் நட்சத்திரங்கள்
மண்ணில் என் விளக்குகள்
பகலை நீ வெளிச்சப் படுத்துகிறாய்
இரவை நான் அலங்கரிக்கிறேன்
உன் ஒற்றை விளக்குச் சாயும் போது
ஓராயிரம் விளக்குகளை நான்
ஏற்றி வைக்கிறேன்
உன் ஒளி புகமுடியாத
இடங்களில் கூட
என் விளக்குகள் எரிகின்றன
சூரியத் தூரிகைகள்
உன் பெயரை வரைகின்றன
விளக்கின் நாக்குகள்
என் புகழைப் பாடுகின்றன
அணையாத விளக்குகளின்
சொந்தக்காரன் நீ
அணையும் விளக்குகளை
ஆக்கியவன் நான்
நாம் இருவரும்
விளக்கின் காதலர்கள்
நம் ஒற்றுமை
வெளிச்சத்தில் மட்டுமல்ல
இருளிலும் மறைவதில்லை
இறைவா , எவரும்
என் விளக்குகளை அணைக்கலாம்;
என்னை அணைக்க முடியாது
ஏனெனில்
நான்
நீ ஏற்றிய விளக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment